| திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் | 
| ஆறாம் திருமுறை | 
| 6.16 திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் | 
| சூலப் படையுடையோர் தாமே போலுஞ் சுடர்த்திங்கட் கண்ணி யுடையார் போலும்
 மாலை மகிழ்ந்தொருபால் வைத்தார் போலும்
 மந்திரமுந் தந்திரமு மானார் போலும்
 வேலைக் கடல்நஞ்ச முண்டார் போலும்
 மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்
 ஏலக் கமழ்குழலாள் பாகர் போலும்
 இடைமருது மேவிய ஈச னாரே.
 ,ilkUJ nktpa <.r dhnu.
 
 | 1 | 
| காரார் கமழ்கொன்றைக் கண்ணி போலுங் காரானை ஈருரிவை போர்த்தார் போலும்
 பாரார் பரவப் படுவார் போலும்
 பத்துப் பல்லூழி பரந்தார் போலுஞ்
 சீரால் வணங்கப் படுவார் போலுந்
 திசையனைத்து மாய்மற்று மானார் போலும்
 ஏரார் கமழ்குழலாள் பாகர் போலும்
 இடைமருது மேவிய ஈச னாரே.
 
 | 2 | 
| வேதங்கள் வேள்வி பயந்தார் போலும் விண்ணுலகு மண்ணுலகு மானார் போலும்
 பூதங்க ளாய புராணர் போலும்
 புகழ வளரொளியாய் நின்றார் போலும்
 பாதம் பரவப் படுவார் போலும்
 பத்தர் களுக்கின்பம் பயந்தார் போலும்
 ஏதங்க ளான கடிவார் போலும்
 இடைமருது மேவிய ஈச னாரே.
 
 | 3 | 
| திண்குணத்தார் தேவர் கணங்க ளேத்தித் திசைவணங்கச் சேவடியை வைத்தார் போலும்
 விண்குணத்தார் வேள்வி சிதைய நூறி
 வியன்கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும்
 பண்குணத்தார் பாடலோ டாட லோவாப்
 பரங்குன்ற மேய பரமர் போலும்
 எண்குணத்தார் எண்ணா யிரவர் போலும்
 இடைமருது மேவிய ஈச னாரே.
 
 | 4 | 
| ஊக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த உயர்பொழி லண்ணாவி லுறைகின் றாரும்
 பாகம் பணிமொழியாள் பாங்க ராகிப்
 படுவெண் டலையிற் பலிகொள் வாரும்
 மாகமடை மும்மதிலு மெய்தார் தாமு
 மணிபொழில் சூழாரூர் உறைகின் றாரும்
 ஏகம்ப மேயாரு மெல்லா மாவார்
 இடைமருது மேவிய ஈச னாரே.
 
 | 5 | 
| ஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும் அறுமூன்றும் நான்மூன்று மானார் போலுஞ்
 செய்வினைகள் நல்வினைக ளானார் போலுந்
 திசையனைத்து மாய்நிறைந்த செல்வர் போலுங்
 கொய்மலரங் கொன்றைச் சடையார் போலுங்
 கூத்தாட வல்ல குழகர் போலும்
 எய்யவந்த காமனையுங் காய்ந்தார் போலும்
 இடைமருது மேவிய ஈச னாரே.
 
 | 6 | 
| பிரியாத குணமுயிர்கட் கஞ்சோ டஞ்சாய்ப் பிரிவுடைய குணம்பேசிற் பத்தோ டொன்றாய்
 விரியாத குணமொருகால் நான்கே யென்பர்
 விரிவிலாக் குணநாட்டத் தாறே யென்பர்
 தெரிவாய குணமஞ்சுஞ் சமிதை யஞ்சும்
 பதமஞ்சுங் கதியஞ்சுஞ் செப்பி னாரும்
 எரியாய தாமரைமே லியங்கி னாரும்
 இடைமருது மேவிய ஈச னாரே.
 
 | 7 | 
| தோலிற் பொலிந்த வுடையார் போலுஞ் சுடர்வா யரவசைத்த சோதி போலும்
 ஆல மமுதாக வுண்டார் போலும்
 அடியார்கட் காரமுத மானார் போலுங்
 காலனையுங் காய்ந்த கழலார் போலுங்
 கயிலாயந் தம்மிடமாகக் கொண்டார் போலும்
 ஏலங் கமழ்குழலாள் பாகர் போலும்
 இடைமருது மேவிய ஈச னாரே.
 
 | 8 | 
| பைந்தளிர்க் கொன்றையந் தாரார் போலும் படைக்கணாள் பாக முடையார் போலும்
 அந்திவாய் வண்ணத் தழகர் போலும்
 மணிநீல கண்ட முடையார் போலும்
 வந்த வரவுஞ் செலவு மாகி
 மாறாதென் னுள்ளத் திருந்தார் போலும்
 எந்த மிடர்தீர்க்க வல்லார் போலும்
 இடைமருது மேவிய ஈச னாரே.
 
 | 9 | 
| கொன்றையங் கூவிள மாலை தன்னைக் குளிர்சடைமேல் வைத்துகந்த கொள்கை யாரும்
 நின்ற அனங்கனை நீறா நோக்கி
 செருப்புருவ மாய்நின்ற நிமல னாரும்
 அன்றவ் வரக்கன் அலறி வீழ
 அருவரையைக் காலா லழுத்தி னாரும்
 என்று மிடுபிச்சை ஏற்றுண் பாரும்
 இடைமருது மேவிய ஈச னாரே.
 
 | 10 | 
| திருச்சிற்றம்பலம் | 
| திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் | 
| ஆறாம் திருமுறை | 
| 6.17 திருவிடைமருதூர் - திருத்தாண்டகம் | 
| ஆறு சடைக்கணிவர் அங்கைத் தீயர் அழகர் படையுடையர் அம்பொற் றோள்மேல்
 நீறு தடவந் திடப மேறி
 நித்தம் பலிகொள்வர் மொய்த்த பூதங்
 கூறுங் குணமுடையர் கோவ ணத்தர்
 கோடால வேடத்தர் கொள்கை சொல்லின்
 ஈறுந் நடுவு முதலு மாவார்
 இடைமருது மேவி யிடங்கொண் டாரே.
 
 | 1 | 
| மங்குல் மதிவைப்பர் வான நாடர் மடமா னிடமுடையர் மாத ராளைப்
 பங்கில் மிகவைப்பர் பால்போல் நீற்றர்
 பளிக்கு வடம்புனைவர் பாவ நாசர்
 சங்கு திரையுகளுஞ் சாய்க்கா டாள்வர்
 சரிதை பலவுடையர் தன்மை சொல்லின்
 எங்கும் பலிதிரிவர் என்னுள் நீங்கார்
 இடைமருது மேவி யிடங்கொண் டாரே.
 
 | 2 | 
| ஆல நிழலிருப்பர் ஆகா யத்தர் அருவரையி னுச்சியர் ஆணர் பெண்ணர்
 காலம் பலகழித்தார் கறைசேர் கண்டர்
 கருத்துக்குச் சேயார்தாங் காணா தார்க்குக்
 கோலம் பலவுடையர் கொல்லை யேற்றர்
 கொடுமழுவர் கோழம்பம் மேய ஈசர்
 ஏல மணநாறும் ஈங்கோய் நீங்கார்
 இடைமருது மேவி யிடங்கொண் டாரே.
 
 | 3 | 
| தேசர் திறம்நினைவார் சிந்தை சேருஞ் செல்வர் திருவாரூ ரென்றும் உள்ளார்
 வாச மலரின்கண் மான்தோல் போர்ப்பர்
 மருவுங் கரியுரியர் வஞ்சக் கள்வர்
 நேசர் அடைந்தார்க் கடையா தார்க்கு
 நிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க் கென்றும்
 ஈசர் புனற்பொன்னித் தீர்த்தர் வாய்த்த
 இடைமருது மேவி யிடங்கொண் டாரே.
 
 | 4 | 
| கரப்பர் கரியமனக் கள்வர்க் குள்ளங் கரவாதே தந்நினைய கிற்பார் பாவந்
 துரப்பர் தொடுகடலின் நஞ்ச முண்பர்
 தூய மறைமொழியர் தீயா லொட்டி
 நிரப்பர் புரமூன்றும் நீறு செய்வர்
 நீள்சடையர் பாய்விடைகொண் டெங்கும் ஐயம்
 இரப்பர் எமையாள்வர் என்னுள் நீங்கார்
 இடைமருது மேவி யிடங்கொண் டாரே.
 
 | 5 | 
| கொடியா ரிடபத்தர் கூத்து மாடிக் குளிர்கொன்றை மேல்வைப்பர் கோல மார்ந்த
 பொடியாரு மேனியர் பூதிப்பையர்
 புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்
 அடியார் குடியாவர் அந்த ணாளர்
 ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற
 இடியார் களிற்றுரியார் எவரும் போற்ற
 இடைமருது மேவி யிடங்கொண் டாரே.
 
 | 6 | 
| பச்சை நிறமுடையார் பாலர் சாலப் பழையர் பிழையெலாம் நீக்கி யாள்வர்
 கச்சைக் கதநாகம் பூண்ட தோளர்
 கலனொன்று கையேந்தி இல்லந் தோறும்
 பிச்சை கொளநுகர்வர் பெரியர் சாலப்
 பிறங்கு சடைமுடியர் பேணுந் தொண்டர்
 இச்சை மிகஅறிவர் என்று முள்ளார்
 இடைமருது மேவி யிடங்கொண் டாரே.
 
 | 7 | 
| காவார் சடைமுடியர் காரோ ணத்தர் கயிலாய மன்னினார் பன்னு மின்சொற்
 பாவார் பொருளாளர் வாளார் கண்ணி
 பயிலுந் திருவுருவம் பாக மேயார்
 பூவார் புனலணவு புன்கூர் வாழ்வர்
 புரமூன்று மொள்ளழலாக் காயத் தொட்ட
 ஏவார் சிரைமலையர் எங்குந் தாமே
 இடைமருது மேவி யிடங்கொண் டாரே.
 
 | 8 | 
| புரிந்தார் நடத்தின்கண் பூத நாதர் பொழிலாரூர் புக்குறைவர் போந்து தம்மிற்
 பிரிந்தா ரகல்வாய பேயுந் தாமும்
 பிரியா ரொருநாளும் பேணு காட்டில்
 எரிந்தா ரனலுகப்பர் ஏழிலோசை
 எவ்விடத்துந் தாமேயென் றேத்து வார்பால்
 இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும்
 இடைமருது மேவி யிடங்கொண் டாரே.
 
 | 9 | 
| விட்டிலங்கு மாமழுவர் வேலை நஞ்சர் விடங்கர் விரிபுனல்சூழ் வெண்காட் டுள்ளார்
 மட்டிலங்கு தார்மாலை மார்பில் நீற்றர்
 மழபாடி யுள்ளுறைவர் மாகா ளத்தர்
 சிட்டிலங்கு வல்லரக்கர் கோனை யன்று
 செழுமுடியுந் தோளைந்நான் கடரக் காலால்
 இட்டிரங்கி மற்றவனுக் கீந்தார் வென்றி
 இடைமருது மேவி யிடங்கொண் டாரே.
 
 | 10 | 
| திருச்சிற்றம்பலம் |