| திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் | 
| ஆறாம் திருமுறை | 
| 6.41 திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் | 
| வகையெலா முடையாயும் நீயே யென்றும் வான்கயிலை மேவினாய் நீயே யென்றும்
 மிகையெலாம் மிக்காயும் நீயே யென்றும்
 வெண்காடு மேவினாய் நீயே யென்றும்
 பகையெலாந் தீர்த்தாண்டாய் நீயே யென்றும்
 பாசூர் அமர்ந்தாயும் நீயே யென்றும்
 திகையெலாந் தொழச்செல்வாய நீயே யென்றும்
 நின்றநெய்த தானாவென் னெஞ்சு ளாயே.
 
 | 1 | 
| ஆர்த்த எனக்கன்பன் நீயே யென்றும் ஆதிக் கயிலாயன் நீயே யென்றும்
 கூர்த்த நடமாடி நீயே யென்றுங்
 கோடிகா மேய குழகா வென்றும்
 பார்த்தற் கருள்செய்தாய் நீயே யென்றும்
 பழையனூர் மேவிய பண்பா வென்றும்
 தீர்த்தன் சிவலோகன் நீயே யென்றும்
 நின்றநெய்த தானாவென் னெஞ்சு ளாயே.
 
 | 2 | 
| அல்லாய்ப் பகலானாய் நீயே யென்றும் ஆதிக் கயிலாயன் நீயே யென்றும்
 கல்லா லமர்ந்தாயும் நீயே யென்றுங்
 காளத்திக் கற்பகமும் நீயே யென்றும்
 சொல்லாய்ப்பொருளானாய் நீயே யென்றுஞ்
 சோற்றுத் துறையுறைவாய் நீயே யென்றும்
 செல்வாய்த் திருவானாய் நீயே யென்றும்
 நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.
 
 | 3 | 
| மின்னே ரிடைபங்கன் நீயே யென்றும் வெண்கயிலை மேவினாய் நீயே யென்றும்
 பொன்னேர் சடைமுடியாய் நீயே யென்றும்
 பூத கணநாதன் நீயே யென்றும்
 என்னா விரதத்தாய் நீயே யென்றும்
 ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும்
 தென்னூர்ப் பதியுளாய் நீயே யென்றும்
 நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.
 
 | 4 | 
| முந்தி யிருந்தாயும் நீயே யென்றும் முன்கயிலை மேவினாய் நீயே யென்றும்
 நந்திக் கருள்செய்தாய் நீயே யென்றும்
 நடமாடி நள்ளாறன் நீயே யென்றும்
 பந்திப் பரிபாயும் நீயே யென்றும்
 வைஞ்ஞீலி மேவினாய் நீயே யென்றும்
 சிந்திப் பரியாயும் நீயே யென்றும்
 நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.
 
 | 5 | 
| தக்கா ரடியார்க்கு நீயே யென்றுந் தலையார் கயிலாயன் நீயே யென்றும்
 அக்காரம் பூண்டாயும் நீயே யென்றும்
 ஆக்கூரில் தான்றோன்றி நீயே யென்றும்
 புக்காய ஏழுலகும் நீயே யென்றும்
 புள்ளிருக்கு வேளூராய் நீயே யென்றும்
 தெக்காரு மாகோணத் தானே யென்றும்
 நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.
 
 | 6 | 
| புகழும் பெருமையாய் நீயே யென்றும் பூங்கயிலை மேவினாய் நீயே யென்றும்
 இகழுந் தலையேந்தி நீயே யென்றும்
 இராமேச் சுரத்தின்பன் நீயே யென்றும்
 அகழும் மதிலுடையாய் நீயே யென்றும்
 ஆலவாய் மேவினாய் நீயே யென்றும்
 திகழும் மதிசூடி நீயே யென்றும்
 நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.
 
 | 7 | 
| வானவர்க்கு மூத்திளையாய் நீயே யென்றும் வானக் கயிலாயன் நீயே யென்றும்
 கான நடமாடி நீயே யென்றுங்
 கடவூரில் வீரட்டன் நீயே யென்றும்
 ஊனார் முடியறுத்தாய் நீயே யென்றும்
 ஒற்றியூ ராரூராய் நீயே யென்றும்
 தேனாய் அமுதானாய் நீயே யென்றும்
 நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.
 
 | 8 | 
| தந்தைதாய் இல்லாதாய் நீயே யென்றுந் தலையார் கயிலாயன் நீயே யென்றும்
 எந்தாயெம் பிரானானாய் நீயே யென்றும்
 ஏகம்பத் தென்னீசன் நீயே யென்றும்
 முந்திய முக்கணாய் நீயே யென்றும்
 மூவலூர் மேவினாய் நீயே யென்றும்
 சிந்தையாய் தேனூராய் நீயே யென்றும்
 நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.
 
 | 9 | 
| மறித்தான் வலிசெற்றாய் நீயே யென்றும் வான்கயிலை மேவினாய் நீயே யென்றும்
 வெறுத்தார் பிறப்பறுப்பாய் நீயே யென்றும்
 வீழி மிழலையாய் நீயே யென்றும்
 அறத்தாய் அமுதீந்தாய் நீயே யென்றும்
 யாவர்க்குந் தாங்கொணா நஞ்ச முண்டு
 பொறுத்தாய் புலனைந்தும் நீயே யென்றும்
 நின்றநெய்த் தானாவென் னெஞ்சு ளாயே.
 
 | 10 | 
| திருச்சிற்றம்பலம் | 
| திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் | 
| ஆறாம் திருமுறை | 
| 6.42 திருநெய்த்தானம் - திருத்தாண்டகம் | 
| மெய்த்தானத் தகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்றுக் குறைமுடித்து வினைக்கு கூடாம்
 இத்தானத் திருந்திங்ங னுய்வா னெண்ணும்
 இதனையொழி இயம்பக்கேள் ஏழை நெஞ்சே
 மைத்தான நீள்நயனி பங்கன் வங்கம்
 வருதிரைநீர் நஞ்சுண்ட கண்டன் மேய
 நெய்த்தான நன்னகரென் றேத்தி நின்று
 நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
 
 | 1 | 
| ஈண்டா இரும்பிறவி துறவா ஆக்கை இதுநீங்க லாம்விதியுண் டென்று சொல்ல
 வேண்டாவே நெஞ்சமே விளம்பக் கேள்நீ
 விண்ணவர்தம் பெருமானார் மண்ணி லென்னை
 ஆண்டானன் றருவரையாற் புரமூன் றெய்த
 அம்மானை அரியயனுங் காணா வண்ணம்
 நீண்டா னுறைதுறைநெய்த் தான மென்று
 நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
 
 | 2 | 
| பரவிப் பலபலவுந் தேடி யோடிப் பாழாங் குரம்பையிடைக் கிடந்து வாளா
 குரவிக் குடிவாழ்க்கை வாழ வெண்ணிக்
 குலைகை தவிர்நெஞ்சே கூறக் கேள்நீ
 இரவிக் குலமுதலா வானோர் கூடி
 எண்ணிறந்த கோடி அமர ராயம்
 நிரவிக் கரியவன்நெய்த் தான மென்று
 நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
 
 | 3 | 
| அலையார் வினைத்திறஞ்சே ராக்கை யுள்ளே அகப்பட்டு ளாசையெனும் பாசந் தன்னுள்
 தலையாய்க் கடையாகும் வாழிவல லாழ்ந்து
 தளர்ந்துமிக நெஞ்சமே அஞ்ச வேண்டா
 இலையார் புனற்கொன்றை யெறிநீர்த் திங்கள்
 இருஞ்சடைமேல் வைத்துகந்தான் இமையோ ரேத்தும்
 நிலையா னுறைநிறைநெய்த் தான மென்று
 நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
 
 | 4 | 
| தினைத்தனையோர் பொறையிலா வுயிர்போங் கூட்டைப் பொருளென்று மிகவுன்னி மதியா லிந்த
 அனைத்துலகு மாளலா மென்று பேசும்
 ஆங்காரந் தவிர்நெஞ்சே அமரர்க் காக
 முனைத்துவரு மதில்மூன்றும் பொன்ற வன்று
 முடுகியவெஞ் சிலைவளைத்துச் செந்தீ மூழ்க
 நினைத்தபெருங் கருணையன்நெய்த் தான மென்று
 நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
 
 | 5 | 
| மிறைபடுமிவ் வுடல்வாழ்வை மெய்யென் றெண்ணி வினையிலே கிடந்தழுந்தி வியவேல் நெஞ்சே
 குறையுடையார் மனத்துளான் குமரன் றாதை
 கூத்தாடுங் குணமுடையான் கொலைவேற் கையான்
 அறைகழலுந் திருவடிமேற் சிலம்பு மார்ப்ப
 அவனிதலம் பெயரவரு நட்டம் நின்ற
 நிறைவுடையா னிடமாம்நெய்த் தான மென்று
 நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
 
 | 6 | 
| பேசப் பொருளலாப் பிறவி தன்னைப் பெரிதென்றுன் சிறுமனத்தால் வேண்ட மீண்டு
 வாசக் குழல்மடவார் போக மென்னும்
 வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்சே
 தூசக் கரியுரித்தான் தூநீ றாடித்
 துதைந்திலங்கு நூல்மார்பன் தொடர கில்லா
 நீசர்க் கரியவன்நெய்த் தான மென்று
 நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
 
 | 7 | 
| அஞ்சப் புலனிவற்றா லாட்ட வாட்டுண் டருநோய்க் கிடமாய வுடலின் றன்மை
 தஞ்ச மெனக்கருதித் தாழேல் நெஞ்சே
 தாழக் கருதுதியே தன்னைச் சேரா
 வஞ்ச மனத்தவர்கள் காண வொண்ணா
 மணிகண்டன் வானவர்தம் பிரானென் றெத்தும்
 நெஞ்சர்க் கினியவன்நெய்த் தான மென்று
 நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
 
 | 8 | 
| பொருந்தாத உடலகத்திற் புக்க ஆவி போமா றறிந்தறிந்தே புலைவாழ் வுன்னி
 இருந்தாங் கிடர்ப்படநீ வேண்டா நெஞ்சே
 இமையவர்தம் பெருமானன் றுமையா ளஞ்சக்
 கருந்தாள் மதகரியை வெருவச் சீறுங்
 கண்ணுதல்கண் டமராடிக் கருதார் வேள்வி
 நிரந்தரமா இனிதுறைநெய்த் தான மென்று
 நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
 
 | 9 | 
| உரித்தன் றுனக்கிவ் வுடலின் றன்மை உண்மை யுரைத்தேன் விரத மெல்லாந்
 தறித்துந் தவமுயன்றும் வாழா நெஞ்சே
 தம்மிடையி லில்லார்க்கொன் றல்லார்க் கன்னன்
 எரித்தான் அனலுடையான் எண்டோ ளானே
 எம்பெருமா னென்றேத்தா இலங்கைக் கோனை
 நெரித்தானை நெய்த்தானம் மேவி னானை
 நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே.
 
 | 10 | 
| திருச்சிற்றம்பலம் |