| திருஞானசம்பந்தர் தேவாரம் | 
| மூன்றாம் திருமுறை | 
3.122 திருஓமம்புலியூர் பண் - புறநீர்மை | 
பூங்கொடி மடவாள் உமையொரு பாகம் 
    புரிதரு சடைமுடி யடிகள் 
வீங்கிருள் நட்டம் ஆடுமெம் விகிர்தர் 
    விருப்பொடும் உறைவிடம் வினவில் 
தேங்கமழ் பொழிலிற் செழுமலர் கோதிச் 
    செறிதரு வண்டிசை பாடும் 
ஓங்கிய புகழார் ஓமமாம் புலியூர் 
    உடையவர் வடதளி யதுவே.
  | 
1 | 
சம்பரற் கருளிச் சலந்தரன் வீயத் 
    தழலுமிழ் சக்கரம் படைத்த 
எம்பெரு மானார் இமையவ ரேத்த 
    இனிதினங் குறைவிடம் வினவில் 
அம்பர மாகி அழலுமிழ் புகையின் 
    ஆகுதி யால்மழை பொழியும் 
உம்பர்க ளேத்தும் ஓமமாம் புலியூர் 
    உடையவர் வடதளி யதுவே.
  | 
2 | 
பாங்குடைத் தவத்துப் பகீரதற் கருளிப் 
    படர்சடைக் கரந்தநீர்க் கங்கை 
தாங்குதல் தவிர்த்துத் தராதலத் திழித்த 
    தத்துவன் உறைவிடம் வினவில் 
ஆங்கெரி மூன்றும் அமர்ந்துட னிருந்த 
    அங்கையால் ஆகுதி வேட்கும் 
ஓங்கிய மறையோர் ஓமமாம் புலியூர் 
    உடையவர் வடதளி யதுவே.
  | 
3 | 
புற்றர வணிந்து நீறுமெய் பூசிப் 
    பூதங்கள் சூழ்தர வூரூர் 
பெற்றமொன் றேறிப் பெய்பலி கொள்ளும் 
    பிரானவன் உறைவிடம் வினவிற் 
கற்றநால் வேதம் அங்கமோ ராறுங் 
    கருத்தினார் அருத்தியாற் றெரியும் 
உற்றபல் புகழார் ஓமமாம் புலியூர் 
    உடையவர் வடதளி யதுவே.
  | 
4 | 
நிலத்தவர் வானம் ஆள்பவர் கீழோர் 
    துயர்கெட நெடியமாற் கருளால் 
அலைத்தவல் லசுரர் ஆசற வாழி 
    யளித்தவன் உறைவிடம் வினவிற் 
சலத்தினாற் பொருள்கள் வேண்டுதல் செய்யாத் 
    தன்மையார் நன்மையால் மிக்க 
உலப்பில்பல் புகழார் ஓமமாம் புலியூர் 
    உடையவர் வடதளி யதுவே.
  | 
5 | 
மணந்திகழ் திசைகள் எட்டும் ஏழிசையும் 
    மலியுமா றங்கம் ஐவேள்வி 
இணைந்தநால் வேதம் மூன்றெரி யிரண்டு 
    பிறப்பென வொருமையா லுணருங் 
குணங்களும் அவற்றின் கொள்பொருள் குற்றம் 
    மற்றவை யுற்றது மெல்லாம் 
உணர்ந்தவர் வாழும் ஓமமாம் புலியூர் 
    உடையவர் வடதளி யதுவே.
  | 
6 | 
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
  | 
7 | 
தலையொரு பத்துந் தடக்கைய திரட்டி 
    தானுடை அரக்க னொண்கயிலை 
அலைவது செய்த அவன்றிறல் கெடுத்த 
    ஆதியார் உறைவிடம் வினவில் 
மலையென வோங்கும் மாளிகை நிலவும் 
    மாமதில் மாற்றல ரென்றும் 
உலவுபல் புகழார் ஓமமாம் புலியூர் 
    உடையவர் வடதளி யதுவே.
  | 
8 | 
கள்ளவிழ் மலர்மே லிருந்தவன் கரியோ 
    னென்றிவர் காண்பரி தாய 
ஒள்ளெரி யுருவர் உமையவ ளோடும் 
    உகந்தினி துறைவிடம் வினவிற் 
பள்ளநீர் வாளை பாய்தரு கழனி 
    பனிமலர்ச் சோலைசூ ழாலை 
ஒள்ளிய புகழார் ஓமமாம் புலியூர் 
    உடையவர் வடதளி யதுவே.
  | 
9 | 
தெள்ளிய ரல்லாத் தேரரோ டமணர் 
    தடுக்கொடு சீவரம் உடுக்குங் 
கள்ளமார் மனத்துக் கலதிகட் கருளாக் 
    கடவுளார் உறைவிடம் வினவில் 
நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்து 
    நலந்திகழ் மூன்றெரி யோம்பும் 
ஒள்ளியார் வாழும் ஓமமாம் புலியூர் 
    உடையவர் வடதளி யதுவே.
  | 
10 | 
விளைதரு வயலுள் வெயில்செறி பவளம் 
    மேதிகள் மேய்புலத் திடறி 
ஒளிதர மல்கும் ஓமமாம் புலியூர் 
    உடையவர் வடதளி யரனைக் 
களிதரு நிவப்பிற் காண்டகு செல்வக் 
    காழியுள் ஞானசம் பந்தன் 
அளிதரு பாடல் பத்தும்வல் லார்கள் 
    அமரலோ கத்திருப் பாரே.
  | 
11 | 
| திருச்சிற்றம்பலம் |