| திருஞானசம்பந்தர் தேவாரம் | 
| மூன்றாம் திருமுறை | 
3.46 திருக்கருகாவூர் பண் - கௌசிகம் | 
முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே 
மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக் 
கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம் 
அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
  | 
1 | 
விமுத வல்லசடை யான்வினை யுள்குவார்க் 
கமுத நீழலக லாததோர் செல்வமாங் 
கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர் 
அமுதர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
  | 
2 | 
பழக வல்லசிறுத் தொண்டர்பா வின்னிசைக் 
குழக ரென்றுகழை யாவழை யாவருங் 
கழல்கொள் பாடலுடை யார்கரு காவூரெம் 
அழகர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
  | 
3 | 
பொடிமெய் பூசிமலர் கொய்துபு ணர்ந்துடன் 
செடிய ரல்லாவுள்ளம் நல்கிய செல்வத்தர் 
கடிகொள் முல்லைகம ழுங்கரு காவூரெம் 
அடிகள் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
  | 
4 | 
மைய லின்றிமலர் கொய்து வணங்கிடச் 
செய்ய வுள்ளம்மிக நல்கிய செல்வத்தர் 
கைதன் முல்லைகம ழுங்கரு காவூரெம் 
ஐயர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
  | 
5 | 
மாசில் தொண்டர்மலர் கொண்டு வணங்கிட 
ஆசை யாரஅருள் நல்கிய செல்வத்தர் 
காய்சி னத்தவிடை யார்கரு காவூரெம் 
ஈசர் வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.
  | 
6 | 
வெந்த நீறுமெய் பூசிய வேதியன் 
சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன் 
கந்த மௌவல்கம ழுங்கரு காவூரெம் 
எந்தை வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.
  | 
7 | 
இப்பதிகத்தில் எட்டாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
  | 
8 | 
பண்ணின் நேர்மொழி யாளையோர் பாகனார் 
மண்ணு கோலம்முடை யம்மல ரானொடுங் 
கண்ணன் நேடஅரி யார்கரு காவூரெம் 
அண்ணல் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
  | 
9 | 
போர்த்த் மெய்யினர் போதுழல் வார்கள்சொல் 
தீர்த்த மென்றுதெளி வீர்தெளி யேன்மின் 
கார்த்தண் முல்லைகம ழுங்கரு காவூரெம் 
ஆத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
  | 
10 | 
கலவ மஞ்ஞை யுலவுங் கருகாவூர் 
நிலவு பாடலுடை யான்றன நீள்கழல் 
குலவு ஞானசம் பந்தன செந்தமிழ் 
சொலவ லாரவர் தொல்வினை தீருமே.
  | 
11 | 
| திருச்சிற்றம்பலம் |