| திருஞானசம்பந்தர் தேவாரம் | 
| மூன்றாம் திருமுறை | 
3.22 திருப்பஞ்சாக்கரப்பதிகம் பண் - காந்தாரபஞ்சமம் | 
துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும் 
நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும் 
வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற் 
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.
  | 
1 | 
மந்திர நான்மறை யாகி வானவர் 
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன 
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க் 
கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.
  | 
2 | 
ஊனிலு யிர்ப்பை ஒடுக்கி ஒண்சுடர் 
ஞானவி ளக்கினை யேற்றி நன்புலத் 
தேனைவ ழிதிறந் தேத்து வார்க்கிடர் 
ஆனகெ டுப்பன அஞ்செ ழுத்துமே.
  | 
3 | 
நல்லவர் தீயரெ னாது நச்சினர் 
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ 
கொல்லந மன்தமர் கொண்டு போமிடத் 
தல்லல்கெ டுப்பன அஞ்செ ழுத்துமே.
  | 
4 | 
கொங்கலர் மன்மதன் வாளி யைந்தகத் 
தங்குள பூதமும் அஞ்ச வைம்பொழில் 
தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை 
அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.
  | 
5 | 
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும் 
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும் 
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும் 
அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.
  | 
6 | 
வீடு பிறப்பை யறுத்து மெச்சினர் 
பீடை கெடுப்பன பின்னை நாடொறும் 
மாடு கொடுப்பன மன்னு மாநடம் 
ஆடி யுகப்பன அஞ்செ ழுத்துமே.
  | 
7 | 
வண்டம ரோதி மடந்தை பேணின 
பண்டையி ராவணன் பாடி யுய்ந்தன 
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க் 
கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.
  | 
8 | 
கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச் 
சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும் 
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட் 
கார்வண மாவன அஞ்செ ழுத்துமே.
  | 
9 | 
புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச் 
சித்தத் தவர்கள் தெளிந்து தேறின 
வித்தக நீறணி வார்வி னைப்பகைக் 
கத்திர மாவன அஞ்செ ழுத்துமே.
  | 
10 | 
நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை 
கற்றவன் காழியர் மன்னன் உன்னிய 
அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத் 
துற்றன வல்லவர் உம்ப ராவரே.
  | 
11 | 
| திருச்சிற்றம்பலம் |