| திருஞானசம்பந்தர் தேவாரம் | 
| இரண்டாம் திருமுறை | 
2.108 திருவிற்குடி வீரட்டானம் பண் - நட்டராகம் | 
வடிகொள் மேனியர் வானமா மதியினர் 
    நதியினர் மதுவார்ந்த 
கடிகொள் கொன்றையஞ் சடையினர் கொடியினர் 
    உடைபுலி யதளார்ப்பர் 
விடைய தேறும்எம் மானமர்ந் தினிதுறை 
    விற்குடி வீரட்டம் 
அடிய ராகிநின் றேத்தவல் லார்தமை 
    அருவினை டையாவே.
  | 
1 | 
களங்கொள் கொன்றையுங் கதிர்விரி மதியமுங் 
    கடிகமழ் சடைக்கேற்றி 
உளங்கொள் பத்தர்பால் அருளிய பெருமையர் 
    பொருகரி யுரிபோர்த்து 
விளங்கு மேனியர் எம்பெரு மானுறை 
    விற்குடி வீரட்டம் 
வளங்கொள் மாமல ரால்நினைந் தேத்துவார் 
    வருத்தம தறியாரே.
  | 
2 | 
கரிய கண்டத்தர் வெளியவெண் பொடியணி 
    மார்பினர் வலங்கையில் 
எரியர் புன்சடை யிடம்பெறக் காட்டகத் 
    தாடிய வேடத்தர் 
விரியும் மாமலர்ப் பொய்கைசூழ் மதுமலி 
    விற்குடி வீரட்டம் 
பிரிவி லாதவர் பெருந்தவத் தோரெனப் 
    பேணுவ ருலகத்தே.
  | 
3 | 
பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர் 
    பொலிதர நலமார்ந்த 
பாதஞ் சேரிணைச் சிலம்பினர் கலம்பெறு 
    கடலெழு விடமுண்டார் 
வேத மோதிய நாவுடை யானிடம் 
    விற்குடி வீரட்டஞ் 
சேரும் நெஞ்சினர்க் கல்லதுண் டோபிணி 
    தீவினை கெடுமாறே.
  | 
4 | 
கரிய ஏற்றினர் கனலன மேனியர் 
    அனலெழ வூர்மூன்றும் 
இடிய மால்வரை கால்வளைத் தான்றன 
    தடியவர் மேலுள்ள 
வெடிய வல்வினை வீட்டுவிப் பானுறை 
    விற்குடி வீரட்டம் 
படிய தாகவே பரவுமின் பரவினாற் 
    பற்றறும் அறுநோயே.
  | 
5 | 
பெண்ணொர் கூறினர் பெருமையர் சிறுமறிக் 
    கையினர் மெய்யார்ந்த 
அண்ண லன்புசெய் வாரவர்க் கெளியவர் 
    அரியவர் அல்லார்க்கு 
விண்ணி லார்பொழில் மல்கிய மலர்விரி 
    விற்குடி வீரட்டம் 
எண்ணி லாவிய சிந்தையி னார்தமக் 
    கிடர்கள்வந் தடையாவே.
  | 
6 | 
இப்பதிகத்தின் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
  | 
7 | 
இடங்கொள் மாகடல் இலங்கையர் கோன்றனை 
    யிகலழி தரவூன்று 
திடங்கொள் மால்வரை யானுரை யார்தரு 
    பொருளினன் இருளார்ந்த 
விடங்கொள் மாமிட றுடையவ னுறைபதி 
    விற்குடி வீரட்டந் 
தொடங்கு மாறிசை பாடிநின் றார்தமைத் 
    துன்பநோ யடையாவே.
  | 
8 | 
செங்கண் மாலொடு நான்முகன் தேடியந் 
    திருவடி யறியாமை 
எங்கு மாரெரி யாகிய இறைவனை 
    யறைபுனல் முடியார்ந்த 
வெங்கண் மால்வரைக் கரியுரித் துகந்தவன் 
    விற்குடி வீரட்டந் 
தங்கை யாற்றொழு தேத்தவல் லாரவர் 
    தவமல்கு குணத்தாரே.
  | 
9 | 
பிண்ட முண்டுழல் வார்களும் பிரிதுவ 
    ராடைய ரவர்வார்த்தை 
பண்டு மின்றுமோர் பொருளெனக் கருதன்மின் 
    பரிவுறு வீர்கேண்மின் 
விண்ட மாமலர்ச் சடையவ னிடமெனில் 
    விற்குடி வீரட்டங் 
கண்டு கொண்டடி காதல்செய் வாரவர் 
    கருத்துறுங் குணத்தாரே.
  | 
10 | 
விலங்க லேசிலை யிடமென வுடையவன் 
    விற்குடி வீரட்டத் 
திலங்கு சோதியை எம்பெரு மான்றனை 
    யெழில்திகழ் கழல்பேணி 
நலங்கொள் வாழ்பொழிற் காழியுள் ஞானசம் 
    பந்தனற் றமிழ்மாலை 
வலங்கொ டேயிசை மொழியுமின் மொழ்ந்தக்கால் 
    மற்றது வரமாமே.
  | 
11 | 
| திருச்சிற்றம்பலம் |