| திருஞானசம்பந்தர் தேவாரம் | 
| இரண்டாம் திருமுறை | 
2.69 திருப்பாண்டிக்கொடுமுடி பண் - காந்தாரம் | 
பெண்ணமர் மேனியி னாரும் பிறைபுல்கு செஞ்சடை யாருங் 
கண்ணமர் நெற்றியி னாருங் காதம ருங்குழை யாரும் 
எண்ணம ருங்குணத் தாரும் இமையவ ரேத்த நின்றாரும் 
பண்ணமர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
  | 
1 | 
தனைக்கணி மாமலர் கொண்டு தாள்தொழு வாரவர் தங்கள் 
வினைப்பகை யாயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில் 
நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார் நிரைவளை மங்கை நடுங்கப் 
பனைக்கைப் பகட்டுரி போர்த்தார் பாண்டிக் கொடுமுடி யாரே.
  | 
2 | 
சடையமர் கொன்றையி னாருஞ் சாந்தவெண் ணீறணிந் தாரும் 
புடையமர் பூதத்தி னாரும் பொறிகிளர் பாம்பசைத் தாரும் 
விடையம ருங்கொடி யாரும் வெண்மழு மூவிலைச் சூலப் 
படையமர் கொள்கையி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
  | 
3 | 
நறைவளர் கொன்றையி னாரும் ஞாலமெல் லாந்தொழு தேத்தக் 
கறைவளர் மாமிடற் றாருங் காடரங் காக்கன லேந்தி 
மறைவளர் பாடலி னோடு மண்முழ வங்குழல் மொந்தை 
பறைவளர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
  | 
4 | 
போகமு மின்பமு மாகிப் போற்றியென் பாரவர் தங்கள் 
ஆகமு றைவிட மாக அமர்ந்தவர் கொன்றையி னோடும் 
நாகமுந் திங்களுஞ் சூடி நன்னுதல் மங்கைதன் மேனிப் 
பாகமு கந்தவர் தாமும் பாண்டிக் கொடுமுடி யாரே.
  | 
5 | 
கடிபடு கூவிளம் மத்தங் கமழ்சடை மேலுடை யாரும் 
பொடிபட முப்புரஞ் செற்ற பொருசிலை யொன்றுடை யாரும் 
வடிவுடை மங்கைதன் னோடு மணம்படு கொள்கையி னாரும் 
படிபடு கோலத்தி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
  | 
6 | 
ஊனமர் வெண்டலை யேந்தி உண்பலிக் கென்றுழல் வாருந் 
தேனம ரும்மொழி மாது சேர்திரு மேனியி னாருங் 
கானமர் மஞ்ஞைக ளாலுங் காவிரிக் கோலக் கரைமேல் 
பானல நீறணி வாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
  | 
7 | 
புரந்தரன் தன்னொடு வானோர் போற்றியென் றேத்த நின்றாரும் 
பெருந்திறல் வாளரக் கன்னைப் பேரிடர் செய்துகந் தாருங் 
கருந்திரை மாமிடற் றாருங் காரகில் பன்மணி யுந்திப் 
பரந்திழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக் கொடுமுடி யாரே.
  | 
8 | 
திருமகள் காதலி னானுந் திகழ்தரு மாமலர் மேலைப் 
பெருமக னும்மவர் காணாப் பேரழ லாகிய பெம்மான் 
மருமலி மென்மலர்ச் சந்து வந்திழி காவிரி மாடே 
பருமணி நீர்த்துறை யாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
  | 
9 | 
புத்தரும் புந்தியி லாத சமணரும் பொய்ம்மொழி யல்லால் 
மெய்த்தவம் பேசிட மாட்டார் வேடம் பலபல வற்றால் 
சித்தருந் தேவருங் கூடிச் செழுமலர் நல்லன கொண்டு 
பத்தர்கள் தாம்பணிந் தேத்தும் பாண்டிக் கொடுமுடி யாரே.
  | 
10 | 
கலமல்கு தண்கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன் 
பலமல்கு வெண்டலை யேந்திப் பாண்டிக் கொடுமுடி தன்னைச் 
சொலமல்கு பாடல்கள் பத்துஞ் சொல்ல வல்லார் துயர்தீர்ந்து 
நலமல்கு சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே.
  | 
11 | 
| திருச்சிற்றம்பலம் |